கடந்த டிசம்பர் 28 முதல் ஏப்ரல் 14 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 28 முதல் ஏப்ரல் 14 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 11,961 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் 78 பேருக்கே தொற்று உறுதியானதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் பயணக் குமிழி திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டதால் அவர்கள் உள்ளூர் மக்களுடன் எந்த தொடர்புகளையும் பேணவில்லை எனவும் அவா் கூறியுள்ளார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தால் அதனை அமுல்படுத்த தமது அமைச்சு அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செ்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 45 இலங்கையர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 49 இலங்கையர்களுக்கு சனிக்கிழமையன்று தொற்று உறுதியானது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் அதிகளவானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுவரும் நிலையில் நாடு திரும்புவோருக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்