இரண்டு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அன்னை பூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் போது மாணவர்கள் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி பிறந்த மட்டக்களப்பை சேர்ந்த அன்னைபூபதி மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராவார்.
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது.
அந்த வகையில், உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும், புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து, ஆயிரத்து 988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலயத்திற்கு முன்பாக நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார்.
அன்னை பூபதியின் போராட்டத்தை முடக்க இந்திய இராணுவம் பல வழிகளில் முயற்சித்து, உண்ணாவிரதத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் என சிலரை கைது செய்தனர். ஆனாலும் அன்னை பூபதி போராட்டத்தை கைவிடாது உறுதியாக முன்னெடுத்தார்.
இறுதியில் போராட்டத்தின் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளபடாத நிலையில் போராட்டத்தை ஆரம்பித்து 31ஆவது நாளான 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி அன்னை பூபதி உயிர் நீத்திருந்தமை குறிப்பிடக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்