சென்னை -அப்பலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட இலங்கை அணியின் முன்னாள் கிறிக்கெட் வீரரும் கிறிக்கெட் பயிற்றுவிப்பாளருமான முத்தையா முரளிதரன் அஞ்ஜியோ செய்யப்பட்டு இன்று மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்து அப்பலோ மருத்துவமனை இன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
49 வயதாகும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் முத்தையா முரளிதரன் இதய பரிசோதனைக்காக நேற்று அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெற்றிகரமாக அஞ்ஜியோ செய்யப்பட்டு, அஞ்ஜியோ பிளாஸ்ட் மூலம் ஸ்டென்ட் (நாளத்தை அகலப்படுத்தவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இரத்த நாளத்தில் வைக்கப்படும் கண்ணி குழாய்) பொறுத்தப்பட்டது.
மூத்த இருதய சிகிச்சை நிபுணர் செங்கூட்டுவேலன் முரளிதரனுக்கு சிகிச்சை அளித்தார். இந்த சிகிச்சையில் நலம் பெற்ற முத்தையா முரளிதரன் இன்று விடுவிக்கப்படுகிறார். இனி அவர் தனது வழக்கமான பணிளை தொடரலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.முத்தையா முரளிதரன் நேற்றைய தினம் தனது 49ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை, தமிழ்நாடு, சென்னை