Thursday 28th of March 2024 11:35:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!


ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஏழை மக்களின் இறுதிக் கட்டத்தில் இலவச சேவையினை வழங்கி வருகின்ற இவ் அமரர் ஊர்தி சேவையில் தங்களது அதிகார மோதலை வெளிப்படுத்துவதை ஆணையாளர் உடன் நிறுத்த வேண்டும் எனவும், அரசியல் பின்புலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட்டு மக்களின் சேவைக்காக இயங்கும் இவ்அமரர் ஊர்தி சேவை வாகனத்தினை மாநகர வளாகத்திலேயே தரிப்பதற்கு எவ்வித இடையூறும் வழங்காது அனுமதியளித்து மக்களுக்கான சேவைகளைத் தொடருவதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமரர் ஊர்தியில் அரசியல் வேண்டாம், அதிகார மோதலில் மக்கள் சேவையைத் தடுக்காதே போன்ற கேசங்களை எழுப்பியவாறும், ஆணையாளரே ஊழியரை மிரட்டாதே, ஜி.கே அறக்கட்டளை மட்டக்களப்பிற்குத் தேவையான ஒரு சேவை, ஆணையாளரே ஏழை மக்களின் இலவச சேவையை முடக்காதே, ஆணையாளரே ஏழை மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல், ஆணையாளரே உமது ஆணவத்தை ஏழைமக்கள் மீது காட்டாதே, கிழக்கின் ஆளுநரே நீதியினை நிலைநாட்டு போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் மாநகர முதல்வர் உட்பட உரியவர்கள் வருகை தந்து தங்களுக்குரிய உகந்த பதிலை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.

இது எவ்வித அரசியல் பிரச்சினையும் இல்லை. இது மக்களின் பிரச்சினை, மக்களுக்கான இலவச சேவையை முடக்குவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது, அரசிலைத் தாண்டி மக்கள் பற்றி சிந்தித்து அனைவரும் செயற்பட வேண்டும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நன்மை பெற்ற இவ்அமரர் ஊர்தி சேவைக்கு தடையினை எற்படுத்தவதென்பது பாவப்பட்ட ஏழை மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடாகும் என்று தெரிவித்தனர்.

இதன் போது அவ்விடம் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட உறுப்பினர்கள் சிலர் வருகை தந்து ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடினர். 2019ம் ஆண்டு ஜி.கே அறக்கட்டளையின் வேண்டுகோளுகிணங்க மாநகரசபை அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 38 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இவ்அமரர் ஊர்தி மாநகர வளாகத்தில் தரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இரண்டரை வருடங்களுக்கு மேல் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இயங்கி வந்த சேவை தற்போது புதிய ஆணையாளர் வருகை தந்ததன் பின்னர் இவ்வாகனம் வெளியில் போடப்பட்டது. பின்னர் இன்னுமொரு சபைத் தீர்மாதனத்தைக் கொண்டு வந்து வாகனம் மீண்டும் தரிப்பிடத்தில் கொண்டு செல்லப்பட்ட வேளை அவ்வானத்தைச் சேதப்படுத்தி, வாகனத்தைச் சூழ கற்களைக் குவித்து, ஜி.கே. அறக்கட்டளை இலவச அமரர் ஊர்தி என வாகனத்தில் பதிக்கப்பட்டிருந்த பெயரையும் வெள்ளைப் பூச்சினால் அழித்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் உரியவர்களிடம் வாகன சாவி இருக்கையில் எவருக்கும் தெரியாமல் திருப்பெருந்துறைக்கு வாகனம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். இது முற்றுமுழுதாக ஆணையாளரின் செயற்பாடுகள். சபையின் தீர்மானங்களை மீறிச் செயற்படுகிறார் என்று கூறி ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றிருந்தும் நீதிமன்றத்தினையும் அவமதிக்கும் முகமாக மேலும் மேலும் ஆணையாளர் செயற்பட்டு வருகின்றார் என பிரதி முதல்வர் இதன் போது சுட்டிக் காட்டினார்.

இதேவேளை மாநகர ஆணையளரின் தலைமையில் ஊழியர்களை ஒன்று திரட்டி மாநகர வாயிலில் இவ்வார்ப்பாட்டத்திற்கு எதிராகவும், ஜி.கேஅறக்கட்டளையின் அமரர் ஊர்தி சேiவையினை மாநகர வளாகத்திற்குள் இடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது அவ்விடம் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என ஆணையாளர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆணையாளருக்கிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன. இவ்வாறு ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்காமல் ஒரு விடயத்தை ஏற்பாடு செய்து விட்டு ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என்று சொல்வது பொருத்தமற்ற விடயம் என ஊடகவியலாளர்களினால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

பின்னர் அமரர் ஊர்தியினை மாநகர எல்லைக்குள் இடுவதற்கு மாநகர ஊழியர்களுக்கு விருப்பமில்லாத நிலை காணப்படுவதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு ஒரு தனிநபரின் அரசியல் செயற்பாடுகளுக்காக இவ்ஊர்தி சேவை செயற்படுவதாகவும், அவருக்கு மாவட்டத்தில் பல இடங்களில் காணிகள் உள்ளதாகவும், அவற்றில் இவ்வாகனத்தைத் தரித்து தங்கள் சேவையைச் செய்ய முடியும் என்றும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார். மாநகரசபை அனுமதியளிப்பதற்கு அதற்கு ஒரு வரைமுறை உள்ளது. எந்த அதிகார வரம்பிற்குள் மாநகரசபை இவ் ஊர்திக்கு அனுமதியளித்தது என்று தெரியாது. ஊழியர்களின் அச்சமும் நியாயமானது. எனவே தான் இதனை திருப்பெருந்துமுறைக்கு மாற்றினோம். அங்கிருந்தும் இச்சேவையைத் தொடர முடியும் எனறும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது ஊர்தி சேவைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஊழியர்கள் கடமை நேரத்தில் இவ்வாறு கவனயிர்ப்பில் எவ்வித நடைமுறைகளின் ஊடாக ஈடுபடுகின்றார்கள், ஆணையாளர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றாரா? என்ற கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். அதன் அடிபப்படையில் மாநகர முதல்வர் ஊழியர்களிடம் கடமை நேரத்தில் இவ்வாறு செயற்படுவது உகந்ததல்ல என்று தெரிவிக்கையில் மாநகர உத்தியோகத்தர்கள் பலர் கலைந்து சென்றனர்.

இதன் பிற்பாடு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் மாநகர ஊழியர்கள் சிலர் முற்பட்டனர். இதன் போது பிரதான வாயிற் கதவு ஊழியர்களால் மூடப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டிற்கமைவாக நுழைவாயில் மீளத்திறக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளுமாறும். மாநகரசபைக்குள் நுழையாமல் ஆர்ப்பாட்த்தில் ஈடுபடுமாறும் தெரிவித்தமைக்கமைவாக வீதியில் இருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்ம் மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் மாநகரசபைக்குள் அமரர் ஊர்தி நிறுத்துவதற்கு மூன்று தினங்களுக்குள் நடவடிக்கையெடுக்காவிட்டால் காந்திபூங்கா முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE