ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவரை பார்த்து விமர்சிப்பது நாகரீகமான விடயம் அல்ல விக்னேஸ்வரனின் கருத்துக்கு மாவை பதிலடி.
மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொருத்தமற்றவர் என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்பட வில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் கூட 2013ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்படும் முன்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட கிளைகள் தோறும் மாவை சேனாதிராஜா தான் அந்த பொறுப்புக்கு வர வேண்டும் என தீர்மானம் எடுத்திருந்தார்கள். எனக்கும் கூறினார்கள்.
அதைவிட அந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான்கு கட்சிகள்இருந்தன. அந்த நான்கு கட்சிகளும் மாவை சேனாதிராஜா தான் முதலமைச்சர் வேட்பாளராக வர வேண்டும் என தீர்மானித்திருந்தார்கள்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் திரு விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் என பொதுவானவர்கள் பேசினார்கள் நான் அவர்களுக்கு சொல்லி இருந்தேன்.
நான் நிச்சயமாக இந்த விடயத்தில் போட்டியிடுவதா இல்லையா என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும். ஆனால் என்னுடைய நிலைப்பாடு பதவிகளை பறித்துக் கொள்வதல்ல.
போராட்ட வழிகளில் இருந்து வந்த நான் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்குற்றங்கள் அரசாலும் ராணுவத்தாலும் இழைக்கப்பட்ட காரணத்தினால் அந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க வில்லை. போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவில்லை எனவே அந்த விடயங்களில் கூடிய கரிசனை செலுத்தி வழக்குகளைத் தாக்கல் செய்து மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்களில் நான் ஈடுபட்டிருந்தேன்.
விக்னேஸ்வரனை தேர்தலில் நிறுத்துவது தொடர்பில் எமது மத்திய குழுவில் விவாதித்த போது அதிக நேரம் நான் தான் விவாதித்திருந்தேன். அவரை வேட்பாளராக நிறுத்துவோம் என.
அவர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் 21 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
அவர் தனிக்கட்சி ஆரம்பித்து அதன் மூலம் குறைந்தளவு வாக்குகள் பெற்று இருக்கின்றார். எனவே அதனை வைத்தே நாங்கள் பார்க்க முடியும். அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கினை அவர் ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவரை பார்த்து குறிப்பிடுவது அவர் அவ்வளவு நாகரீகமாக விடயம் அல்ல என்பதே எனது கருத்தாகும். அவர் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.
2013-ம் ஆண்டு நாங்கள் என்னை வேட்பாளராக நிறுத்தி இருந்தால் நான் விக்னேஸ்வரனை போல் வெற்றியடைந்திருப்பேன். எனினும் தற்போதைய நிலைமையில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நான் அந்தப் பொறுப்பினை ஏற்க தயாராக உள்ளேன்.
எனினும் தற்போதைய நிலையில் பல கட்சிகள் தற்போதைய அரசாங்கத்தின் நிலைமை போன்றவற்றினை பரிசீலித்து ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி அதற்கு தகுந்த முடிவினை நாங்கள் எடுப்போம் என்றார்.