தற்போது கிடைக்கக்கூடிய வளங்களை உலகம் முழுவதும் நியாயமான முறையில் பகிர்ந்துகொண்டால் அடுத்துவரும் மாதங்களில் உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நேற்று திங்களன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது அவா் இவ்வாறு தெரிவித்தார்.
சா்வதேச காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் ஸ்வீடனில் இருந்து இந்த செய்தியாளர் மாநாட்டில் இணைய நேரலை வழியில் இணைந்துகொண்டார்.
தடுப்பூசி தேசியவாதம் ஒரு மோசமான சுயநலவாத செயற்பாடு என இதன்போது கெப்ரேயஸ் கூறினார். வளரும் நாடுகளில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு தடுப்பூசி இல்லாமல் திண்டாடும் நிலையில் பணக்கார நாடுகள் தங்கள் இளைய குடிமக்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிப்பது நியாயமற்றது எனவும் அவா் தெரிவித்தார்.
கோவிட்19 தொற்று நோயை சில மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வளங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் அவற்றை தொடர்ச்சியாகவும் சமமாகமும் பகிர்ந்து பயன்படுத்தும்போதே தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது சாத்தியம் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
எனினும் உலகெங்கும் 25 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களிடையே ஆபத்தான வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து அவா் கவலை தெரிவித்தார். கொரேனா வைரஸின் புதிய பிறழ்வுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் இந்தத் தொற்று நோயால் ஒரு மில்லியன் இறப்புகளை முதலில் 9 மாதங்களில் எதிர்கொண்டது. கொரோனா இறப்புக்கள் 2 மில்லியனை அடைய 4 மாதங்கள் ஆயின. இப்போது 3 மாதங்களில் ஒரு மில்லியன் இறப்புக்கள் பதிவாகியுள்ளன எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
அதிக வருமானம் கொண்ட நாடுகளில் நான்கு பேரில் ஒருவருக்கு இப்போது கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் ஏழை நாடுகளில் 500 க்கும் மேற்பட்டவர்களில் ஒருவருக்கு மட்டுமே ஒரு தடுப்பூசி இதுவரை கிடைத்துள்ளதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் கூறினார்.
பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் என்ற வித்தியாசம் இல்லாமல் தடுப்பூசித் திட்டத்தில் பாதிக்கப்படக் கூடிய தரப்பினருக்கு முன்னுரிமை அளிப்பதே தார்மீக ரீதியாக சரியான விடயம் எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
தொற்று நோய்க்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் குறித்தும் அவா் குறிப்பிட்டார். இயற்கையை அழிப்பதை நாம் நிறுத்தாவிட்டால் அடிக்கடி இவ்வாறான பேரழிவு தரும் தொற்றுநோய்களை நாங்கள் அனுபவிக்க நேரும் என அவா் கூறினார்.
விலங்குகளிடம் இருந்து வைரஸ் மனிதர்களுக்குப் பரவி விரிவடைவதற்கு சாதாகமான சூழலை நாங்கள்தான் உருவாக்குகிறோம் எனவும் கிரெட்டா துன்பெர்க் தெரிவித்தார். இதேவேளை, தொற்று பரவல் இளவயதினரடையே அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கவலை வெளியிட்டார்.
வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரிடையிலும் தொற்று நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. உலகில் முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் கடந்த வாரம் சுமார் 5.2 மில்லியன் தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவா் சுட்டிக்காட்டினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்