முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையின் புதிய தவிசாளர் தேர்வுசெய்யப்படவுள்ள நிலையில், தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் அதுதொடர்பிலான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது 20.04.2021 இன்று முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினை பிரதிநித்துவப்படுத்தும் கனகையா தவராசா, கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவிவகித்தார். இந் நிலையில் கடந்த 18.03.2021 அன்று, அவர் தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
அந்தவகையில் குறித்த பிரதேசசபையின் புதிய தவிசாளருக்கான தேர்வு எதிர்வரும் 22.04.2021அன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 09.04.2021 அன்று வெளியிடப்பட்ட, 2222/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியிலும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையின் புதிய தவிசாளர் தேர்வு இடம்பெறுமென அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந் நிலையிலேயே குறித்த புதிய தவிசாளர் தேர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தோர் ஒன்றுகூடி, ஓர் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியுள்ளனர்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு