இலங்கையில் இந்த வார இறுதி மற்றும் அடுத்து வரும் வாரங்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மிக ஆபத்தான காலகட்டமாக இருக்கும் என தேசிய கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணித் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் பொதுமக்கள் பயணங்கள், சுற்றுலாக்களைத் தவிா்க்க வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் விடுமுறைக் காலத்தின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அத்துடன், புதிய -ஆபத்தான வைரஸ் பரவி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆபத்தான வைரஸ் பரவல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர் தொகையும் அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்று நாடு முழுவதும் 516 கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பதிவான மிக அதிகளவான தொற்று நோயாளர் தொகையாக இது அமைந்துள்ளது.
நேற்று மிக அதிகளவாக குருநாகல் மாவட்டத்தில் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், புத்தளத்தில் -51, கொழும்பில் -43, கம்பஹாவில் -43, கழுத்துறையில் - 42, காலியில் - 32, யாழ்ப்பாணத்தில் - 15 மற்றும் கண்டியில் 13 கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.