இந்தியாவில் மிக உச்சமாக இன்று ஒரே நாளில் 3 இலட்சத்துக்கு அதிகமான தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா மரணங்களும் பதிவாயின.
இன்று 3 இலட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், 2,104 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன.
புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 59 இலட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பலியெடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் இதுவரை 1 இலட்சத்து 84 ஆயிரத்து 657- ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரங்களில் 1 இலட்சத்து 78 ஆயிரத்து 841 குணமடைந்ததாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 34 இலட்சத்து 54 ஆயிரத்து 880-ஆக உள்ளது. தற்போது நாடு முழுவதும் 22 இலட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை மொத்தம் 13 கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரத்து 644 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொரோனா தொற்று நோயாளர் தொகை உச்ச அளவில் அதிகரித்து வருவதால் தலைநகர் புதுடெல்லி உட்பட வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் மருத்துவமனைகள் பராமரிப்புத் திறனை இழந்து உச்சக்கட்ட நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.
பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. ஒக்சிஜன் இல்லாமல் நோயாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் நோயாளர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களை தகனம் செய்வதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் மயானங்கள் முன்பாக இறந்தவர்களில் சடலங்களுடன் உறவினர்கள் பல மணி நேரங்களாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலையும் தொடர்ந்து பதிவாகி வருகிறது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா