Tuesday 23rd of April 2024 07:41:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
மிருசுவிலில் 8 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்ற படைச் சிப்பாயை விடுவித்தது தவறு - சரத் பொன்சேகா!

மிருசுவிலில் 8 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்ற படைச் சிப்பாயை விடுவித்தது தவறு - சரத் பொன்சேகா!


யாழ்ப்பாணம் - மிருசுவில் பிரதேசத்தில் சிறுவர்கள் உட்பட 8 பொதுமக்களை படுகொலை செய்த கொலையாளியான முன்னாள் இராணுவ சிப்பாய் சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும்போதே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

சுனில் உள்ளிட்ட இராணுவ சிப்பாய்கள் மிருசுவிலில் 8 பேரை கொலை செய்து, கழுத்தை அறுத்து புதைத்தனர். இந்தக் குற்றத்துக்காக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது தவறு.

நீங்கள் எவ்வாறு அத்தகைய செயல்களை அங்கீகரிப்பீர்கள்? எனவும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.

கொலைகாரன் கொலைகாரன் தான். பிரேமாவதி மனம்பேரியை கொன்றதும் இராணுவ சிப்பாயே. அவர் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார். குற்றமிழைத்தவர்களை விடுவித்துவிட்டு இராணுவ வீரர்களை விடுவிக்கின்றோம் என நீங்கள் கொடி தூக்க முடியாது எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

மரண தண்டனை கைதியாக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவை விடுதலை செய்யவும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஒரு மரண தண்டனை கைதியை விடுவிக்க சில பொறிமுறைகள் உள்ளன. இங்கு அவை பின்பற்றப்படவில்லை. ஜனாதிபதி பின் கதவால் தீர்மானங்களை எடுக்கின்றார் என சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டினார்.

மரண தண்டனை கைதியை விடுவிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் பரிந்துரை முன்வைக்க வேண்டும். பின்னர் ஓய்வுபெற்ற சட்டமா அதிபர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும். பாரிய குற்றம் செய்தவர் தொடர்பில் ஜனாதிபதிக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும்.

நன்னடத்தை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இவை இங்கு பின்பற்றப்படவில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இதேவேளை, கொலைக் குற்றவாளியான இராணுவ சிப்பாய் இரத்நாயக்கவை விடுவித்தது பிழை என பகிரங்கமாக ஒப்புக்கொண்டு பேசியதற்காக அவரது உரை முடிந்ததும் நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் அவரது அருகில் சென்று கைலாகு கொடுத்து பாராட்டினர்.

நாங்கள் இந்த கருத்தை சொல்வதை விட, முன்னாள் இராணுவ தளபதி ஒருவர் இவ்விதம் சொல்வது சிங்கள மக்களை சிந்திக்க தூண்டும் என நாம் நினைக்கின்றோம் என இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE