யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை பகுதியில் வாள்களுடன் ரவுடிக் கும்பல் ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதில் இன்று மாலை பதற்றம் ஏற்பட்டிருந்ததாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (ஏப்-22) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை தும்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் மாணவி ஒருவருடன் தகராறில் ஆடுபட்டிருந்தனர். இதனை அவதானித்த அப் பகுதி இளைஞர்களின் எதிர்ப்பால் குறித்த கும்பல் தப்பியோடியியிருந்தது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் ஐந்து மோட்டார் சைக்கிளில் பத்துப் பேர் வாள்களுடன் வந்த கும்பல் தும்பளை திக்கமுனை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை வாள் கொண்டு துரத்தியுள்ளது.
இதையடுத்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் கலைந்தோடியுள்ளனர்.
இதன் போது பொலிஸ் என யாரோ கத்தியதால், பதற்றமடைந்த ரவுடிக்கும்பல் இரண்டு வாள்களை போட்டு விட்டு தப்பியோடியுள்ளது.
அப்போது உண்மையில் பொலிஸார் அவ் விடம் வந்திருக்கவில்லை என்பதும், யாரோ ஒருவர் வேண்டுமென்று பொலிஸ் என கத்தியதை அடுத்தே வாள்களை போட்டுவிட்டு ரவுடிக் கும்பல் தப்பியோடியிருந்தது தெரியவந்திருந்தது.
அதன் பின்னரே அவ்விடத்திற்கு வந்த பொலிஸார், ரவுடிக் கும்பல் போட்டுவிட்டுச் சென்ற குறித்த வாள்களை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் பருத்தித்துறை நகரை அண்டிய பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வடமராட்சி