இலங்கை வங்கி ஹப்புத்தளை கிளை அலுவலக முகாமையாளர், காசாளர் உட்பட மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த கிளை அலுவலகம் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இலங்கை வங்கி, ஹப்புத்தளை கிளை அலுவலகத்தில் கடமையாற்றும் ஒன்பது பேருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பிசிஆர் பரிசோதனைக்கு உரிய மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.
குறித்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களில் மூவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கிளை அலுவலகத்தின் முகாமையாளர், காசாளர் மற்றும் உதவியாளர் என மூவரே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாவர்.
இதையடுத்து ஹப்புத்தளை இலங்கை வங்கி கிளை இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.
தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரும் உடனடியாக ககாகொல்லை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன், வங்கிக்கிளையில் கடமையாற்றுபவர்களின் குடும்பத்தினர் 22 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்ஷன் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை