கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவும் வகையில் சுமார் 100 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவிப் பொருட்களை அமெரிக்க அனுப்புகிறது.
முதல்கட்ட உதவிப் பொருட்கள் இன்று வியாழக்கிழமை இந்தியாவை அடையும் என வெள்ளை மாளிகை நேற்று அறிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்த வாரத்துக்குள் கட்டங்கட்டமாக இந்தப் பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் எனவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிப் பொருட்களில் 1,000 ஒக்ஸிஜன் சிலிண்டர்கள், 15 மில்லியன் என் .95 கவசங்கள், 10 இலட்சம் துரிதமாக கோவிட்19 தொற்று நோயைக் கண்டறியும் அன்டிஜென் பரிசோதைனை கருவிகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இதேவேளை, ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி உற்பத்திக்கான மூலப் பொருட்களையும் இந்தியாவிற்கு அமெரிக்க அனுப்பியுள்ளது. இது 20 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகளைத் தயாரிக்க போதுமானதாகும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தொற்று நோய் தீவிரத்துடன் போராடிய வேளை இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பிவைத்தது. இந்நிலையில் உதவி தேவைப்படும் இந்த நேரத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரக்கா உறுதியுடன் உள்ளது எனவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொற்று நோய் நெருக்கடி தொடர்ந்து மோசமடையும் நிலையில் நேற்றும் 3,645 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். அத்துடன், 3,79,257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
8-ஆவது நாளாக 3 இலட்சத்துக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் இன்று பதிவான நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 83 இலட்சத்து 76 ஆயிரத்து 524-ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 4 ஆயிரத்து 832-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மருத்துவமனைகளில் 30 இலட்சத்து 84 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொற்று நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, அமெரிக்கா