கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன.
பிரான்ஸ், ஜோ்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் அவசரமாகத் தேவைப்படும் ஒக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட இந்தியாவுக்கான மருத்துவ உதவிப் பொருட்களை விமானங்கள் மூலம் அவசரமாக அனுப்பியுள்ளன.
சுமார் 22 தொன் எடை கொண்ட மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் 2 ரஷ்ய விமானங்கள் நேற்று டெல்லி வந்தடைந்தன.
அமெரிக்காவில் இருந்து ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா பரிசோதனை கருவிகள் முதல் கட்டமாக நேற்று இந்தியா வந்து சோ்ந்தன.
தொற்று நோயுடனான போராட்டத்துக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க 40-க்கும் மேற்பட்ட நாடுகள் முன்வந்துள்ளன என டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து வெளியிட்ட இந்திய மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா கூறினார்.
விரைவில் 550 நடமாடும் ஒக்சிஜன் செறிவாக்கிகள், 10 ஆயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் என எதிர்பார்க்கிறோம். ஏராளமான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 2 சிறப்பு விமானங்கள் அமெரிக்காவில் இருந்து வெள்ளிக்கிழமை (இன்று) வரும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும், எகிப்தில் இருந்து 4 இலட்சம் ரெம்டெசிவிர் மருந்தை இறக்குமதி செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. இதே மருந்தை ஐக்கிய அரபு அமீரகம், பங்களாதேஷ், உஸ்பெகிஸ் தான் ஆகிய நாடுகளில் இருந்தும் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவா் கூறினார்.
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று முன்தினம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். அப்போது கொரோனா சவாலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் உதவுவோம் என்று அதிபர் புடின் உறுதி அளித்ததாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புடினின் இந்த உறுதிமொழியை அடுத்து ரஷ்யாவில் இருந்து 2 விமானங்களில் அவசர கால மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் நேற்று டெல்லி வந்தடைந்தன. சுமார் 22 தொன் மருந்து, மருத்துவ உபகரணங்கள் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் ஒக்சிஜன் உற்பத்தி செய்யும் 20 கலன்கள், 75 வென்டிலேட்டர்கள், 150 கண்காணிப்பு கருவிகள், கொரோனா மருந்துகள் என்பன உள்ளடங்கியுள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் திமித்ரி சோலோடோவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ஆம் திகதி தொலைபேசியில் ஆலோசனை நடத் தினார். அதைத் தொடர்ந்து 1,100 ஒக்சிஜன் சிலிண்டர்கள், 1,700 ஒக்சிஜன் செறிவூட்டிகள், கொரோனா தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட் டவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் படும் என அமெரிக்காவால் உறுதியளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சார்பில் 440 ஒக்சிஜன் சிலிண்டர்கள், 9.6 இலட்சம் பரிசோதனை கருவிகள், ஒரு இலட்சம் என் 95 முகக்கவசங்கள் உள்ளிட்டவை விமானம் மூலம் இந்தியாவுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இவை தவிர அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள், அமைப்புகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பிலும் இந்தியாவுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, உலகம்