பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்து அதிகரித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை 3001 புதிய கோவிட்-19 இறப்புகளை பதிவு செய்ததைத் தொடர்ந்து அங்கு மொத்த கொரோனா மரணங்கள் 401,186 ஆக உயர்ந்துள்ளதாக பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை அடுத்து உலகில் அதிக கொரோனா மரணங்கள் பதிவான நாடாக பிரேசில் உள்ளது.
பிரேசிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகையும் இன்றுவரை 1 கோடியே 45 இலட்சத்து 92 ஆயிரத்து 886-ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, பிரேசிலில் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவை பின்தள்ளி பிரேசில் வரைவில் முதல் இடத்தைப் பிடிக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் இதுவரை 5 இலட்சத்து 70 ஆயிரத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் சமீபத்திய வாரங்களில் அங்கு தினசரி இறப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி வருகிறது.
பிரேசிலில் கோவிட்-19 நெருக்கடி நிலை சமீபத்திய மாதங்களில் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது. அங்கு தீவிர தொற்று நோய்க்கு மத்தியிலும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு மறுத்து வருவதால் நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
தீவிர வலதுசாரி முன்னாள் இராணுவ அதிகாரியான பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்க மறுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகளால் நாட்டில் இளம் வயதினர் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அத்துடன், இள வயதினர் மத்தியில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்