அமெரிக்கா - கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ கடற்கரையில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக சான் டியாகோ தீயணைப்பு-மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் மோனிகா முனோஸ் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தவர்களுடன் பயணம் செய்த இந்தப் படகு பாறை ஒன்றுடன் மோதி உடைந்து அதிலிருந்த 30 பேரும் நீரில் மூழ்கியதாக சான் டியாகோவின் அவசர உயிர்காப்புத் துறை தலைவர் ஜேம்ஸ் கார்ட்லேண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சம்பவத்தை அறிந்து ஹெலிகப்டரில் விரைந்த மீட்புக் குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்டனர். எனினும் 3 பேர் உயிரிழந்து விட்டனர் எனவும் அவா் கூறினார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேறும் நோக்குடன் வந்தவர்களே படகு விபத்தில் பாதிக்கப்பட்டதாக சான் டியாகோ துறைமுக மேற்பார்வையாளரும் எல்லை ரோந்து முகவருமான ஜெஃப் ஸ்டீபன்சன் உறுதி செய்துள்ளார்.
மீட்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சான் டியாகோ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய படகில் இருந்தவர்களில் 15 பேர் மெக்சிகன் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
சட்டவிரோதமாக அகதிகளை படகில் ஏற்றிவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களுக்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.