பங்களாதேஷ் - பத்மா ஆற்றில் இன்று திங்கட்கிழமை காலை இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 26 பேர் பலியாகினர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்.
வேகப் படகொன்று மற்றொரு படகுடன் மோதி இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பங்களாதேஸ் மடரிபூர் மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மிராஜ் ஹொசைன் கூறினார்.
சம்பவத்தை அடுத்து களமிறங்கிய மீட்புப் படையினர் இறந்தவர்களின் 26 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மிராஜ் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற நீர்வழிப் பயணங்களால் ஏற்படும் விபத்துக்களால் பங்களாதேஷில் வருடாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் திகதி நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் ஷீட்லக்யா ஆற்றில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய கப்பல் ஒன்று பெரிய கப்பலுடன் மோதியதில், குழந்தைகள் பெண்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.