மெக்ஸிகோ நகரில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் வரை காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் பாலம் இடிந்து விழுந்தவேளை, கீழே வாகனங்கள் பயணம் செய்துகொண்டிருந்தன. பாலம் மேலே விழுந்து அவ்வழியாக சென்ற கார் ஒன்று முற்றாக நசிந்து சிதைவடைந்தது.
உள்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களை மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயில் பாலம் மெக்ஸிகோ நகர மேயராக தற்போதய வெளியுறவு அமைச்சர் மார்சலோ இபார்டு இருந்தபோது கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்துக் கொடூரமானது. இறந்தோர், காயமடைந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் என மார்சலோ இபார்டு தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.