பிரேசிலில் சிறுவர் பராமரிப்பு மையம் ஒன்றுக்குள் புகுந்த 18 வயது இளைஞன் அங்கிருந்து 3 குழந்தைகள் மற்றும் இரண்டு ஊழியர்களை வாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற கொலையாளி ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு பிரேசில் - சாண்டா கேடரினா மாநிலத்தில், சவுடேட்ஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளியின் நோக்கம் என்ன? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் டசின் கணக்கான குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இருந்தனர். தாக்குதலின்போது பல குழந்தைகளை அறைகளுக்குள் வைத்துப் பூட்டி ஊழியர்கள் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கொலையாளியான இளைஞன் 3 குழந்தைகளையும் அவா்களைக் காப்பாற்ற முயன்ற இரண்டு ஊழியர்களையும் வெறித்தனமாக வெட்டிக் கொலை செய்துள்ளான். இதில் ஒரு குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.