78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான மத்திய கற்காலத்தைச் சேர்ந்த 3 வயது மதிக்கப்படும் குழந்தை ஒன்றின் கல்லறை ஆப்ரிக்க நாடான கென்யாவில் உள்ள குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு தலையணையில் கிடத்தி இருப்பது போல இந்தக் குழந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தக் கல்லறையில் அடையாளம் காணப்பட்ட குழந்தையின் எச்சங்களை சர்வதேச அகழ்வாராய்ச்சியாளர்கள் அணி பாதுகாப்பாக வெளியே எடுத்துள்ளது. இந்த எச்சங்கள் மேலதிக பரிசோதனைக்காக பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
குழந்தையின் எலும்பின் வடிவம் மற்றும் அளவு குறித்து மேலதிகமாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளின் பின்னர் அக்குழந்தை ஒரு ஆணாக இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
ஆப்ரிக்காவில் முன்னர் கண்டறியப்பட்ட கல்லறை ஒன்று சுமார் 74,000 ஆண்டு பழமையானது என லண்டனைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளர் லூயிஸ் ஹம்ப்ரே தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்தக் கல்லறையும் ஒரு குழந்தையினுடையதாகும்.
இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ளதே மிக அதிக பழமை வாய்ந்த கல்லறையாகும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.