மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 21 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்களும் சம்பவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இன்று(07) காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 21 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்களும் சம்பவித்துள்ளன.
இந்த 21பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை சேர்ந்த 8பேரும் வெல்லாவெளி, ஓட்டமாவடி,செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா மூன்று பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருமாக மொத்தம் 21பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரணித்த இருவரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை சேர்ந்தவர்களாவர். மரணித்த இருவரும் 69வயதினை உடைய சேர்ந்த ஆண்களாவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1209பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். மொத்தமாக 13மரணங்கள் சம்பவித்துள்ளன. 210பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 988பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
கொவிட் 19 மூன்றாவது அலையில் 16நாட்களில் இதுவரை 226பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். கடைசி 7நாட்களில் 135பேர் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். இந்த 16நாட்களில் மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளன. தேசிய ரீதியில் இறப்பு வீதமானது 1வீதத்திற்கும் குறைவாக காணப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறப்புவீதமானது 1வீதத்திற்கும் அதிகமாக காணப்படுகின்றது.
பொதுமக்கள் கொவிட் 19 மூன்றாவது அலையின் பாரிய பாதிப்பை உணர்ந்து சுகாதார முறைகளை சரியாக பின்பற்றிக்கொள்ளவும். நோன்பு காலத்தில் ஒன்றுகூடல்களை முற்றாக தவிர்த்துக்கொள்ளவும். முகக் கவசங்களை அணிந்துகொள்ளவும். முகக்கவசம் அணியாதவர்கள்மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதார அமைச்சு கூறியதன்படி கொவிட் 19 தொற்றாளர்களுக்காக 100கட்டில்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்படவேண்டும். ஆனால் தற்போது 400கட்டில்கள் மாத்திரமே தயார் நிலையில் உள்ளது. அதற்காக எமது அடுத்த திட்டமிடலாக இரண்டு பிரதேச வைத்தியசாலைகள் கொவிட் வைத்தியசாலைகளாக மாற்றப்படவுள்ளன. மற்றும் இரண்டு ஆதார வைத்தியசாலைகளில் சில பிரிவுகள் கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது. அடுத்த ஒருமாதகாலத்திற்குள் கட்டில்களின் எண்ணிக்கையை 700ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு