சீனாவின் வடமேற்கில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களை பலவந்தமாக அடைத்துவைத்து சீன அரசு கட்டாய வேலை வாங்குவதாக விசாரணை ஒன்றில் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் சோலார் தகடுகளுக்குத் தேவையான முக்கிய கனிய வளமான பாலி சிலிக்கான் சீனாவின் ஷின்ஜியாங் பிரதேசத்தில் அதிகளவில் கிடைக்கிறது. உலகில் ஒட்டுமொாத்த பாலி சிலிக்கானில் சுமார் 45 வீதம் இங்கிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது என பிரிட்டனைச் சேர்ந்த ஷிப்ஃபீல்ட் ஹலம் பல்கலைக்கழகத்தின் (Sheffield Hallam University) ஆராய்ச்சி கூறுகிறது.
உய்குர் முஸ்லிகளை பலவந்தமாக ஈடுபடுத்தி இந்த பாலி சிலிகான் உற்பத்தி செய்யப்படுவதாக அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை சீன அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்த திட்டம் மக்கள் சீனக் குடியரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகிறது. அதில் பணிபுரிபவர்கள் தன்னார்வத்தோடு கலந்து கொள்கின்றனர். வறுமையை ஒழிக்கும் ஒரு திட்டமாக இது அமைந்துள்ளது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான ஷின்ஜியாங் பிரதேசத்தில் உய்குர் முஸ்லிம்கள் சீனாவால் மோசமாக நடத்தப்படுவதாக தொடர்ச்சியாக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சுமார் 10 இலட்சம் உய்குர் இஸ்லாமியர்களை புர்வாழ்வு என்ற பெயரில் சீனா தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
உய்குர் முஸ்லிகள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்படுதல் மற்றும் பெண்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாட்டு செய்தல் ஆகியவற்றுக்கு ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்கா உட்பட சில நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை சீனா தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. ஷின்ஜியாங் பிராந்தியத்தில் பிரிவினைவாதத்தையும், இஸ்லாமிய தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடி வருவதாகவும் சீனா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.