முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத் தொற்சாலைக் கொத்தணியில் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சார்ந்திருந்த 230 குடும்பங்கள் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுவருவதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.
இன்று நண்பகல் வரையில் 130 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
அதனை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளில் 230 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை உடனடியாக சுய தனிமைக்கு உட்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கே நான்கு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் கடமையில் உள்ளமையால், 230 குடும்பங்களைச் சார்ந்தவர்களை கண்காணிப்பது, அவர்களுக்கு தேவையான மருத்துவ தேவைகள் உட்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது உட்பட்ட பலத்த நெருக்கடிகளை முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்களம் எதிர்கொண்டிருப்பதாக தெரியவருகிறது.இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை விசேட பணிக்காக அமர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இன்று நண்பகல் வரையில் 600 பேர் வரையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 130 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இன்று மாலை வரையில் பரிசோதனை தொடர்வதால் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உணரப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இதேவேளை,
முல்லைத்தீவு மாவட்டம் மக்கள் நெருக்கமாக வாழாத மாவட்டம் என்பதால் கொரோனாப் பரவல் அபாயம் குறைவாக உள்ள நிலையில் கொரோனாப் பரவலைத் தடுக்கும் நோக்கில் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை அழைக்கவேண்டாம் என்று சுகாதாரத் திணைக்களத்தினால் ஆடைத் தொழிற்சாலைக்கு அறிவுறுத்தப்பட்டபோதிலும் அந்த அறிவிப்பு மீறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, பிசிஆர் பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னரேயே அனுப்பப்பட்ட பிசிஆர் மாதிரிகள் பல நாட்களாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் தாமதாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்