ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப் பட்டதையடுத்து ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.
இதையடுத்து, இன்று மதியம் 1.30 மணி முதல் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன என்று ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
"இன்று காலை மருதானை ரயில் நிலையத்தில் கொரோனாத் தடுப்பூசி செலுத்துவது ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பொரளை – கெம்பல் பூங்காவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்தவர்களுடன், பொதுமக்களும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு கூடியிருந்ததால் தடுப்பூசி வழங்குவதைத் தொடர முடியவில்லை. இதனால் மருதானை ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
எனவே, ரயில்வே ஊழியர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கப்பட்டதையடுத்து, எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் சேவையை மீண்டும் தொடங்க அவர்கள் ஒப்புதல் வழங்கினர்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை