செவ்வாய் குறித்த ஆராய்ச்சிகளுக்காக சீனாவால் அனுப்பப்பட்ட சுரொங் விண்ணூா்தி (Zhurong rover) செவ்வாயிலிருந்து முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.
இந்த சுரொங் விண்ணூா்தி சீன நேரப்படி ஞாயிற்றுக்கிழமை செவ்வாயில் தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்காவை அடுத்து செவ்வாயில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கும் இரண்டாவது நாடாக சீனா சாதனை படைத்துள்ளது.
செவ்வாயின் வட துருவத்தில் இருக்கும் பெரிய நிலப்பரப்பான உடோபியா பிளானிடியாவில் (Utopia Planitia) இந்த விண்ணூர்தி தரையிறங்கியுள்ளது. ஆறு சக்கரங்கள் கொண்ட அந்த விண்ணூா்தி அங்கு 90 நாட்கள் வரை பணியாற்றும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயில் தரையிறங்கியுள்ள விண்ணூர்திக்கு ஆற்றல் கொடுக்கக்கூடிய சூரிய தகடுகள் தியான்வென் - 1 விண்கலன் தொடர்பு கொள்வதற்கான அண்டனா, சீனாவுடன் தொடர்பு கொள்வதற்கான கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
செவ்வாய் கோள் குறித்த ஆய்வுகளுக்காக 2000ஆம் ஆண்டில் நாசா அனுப்பிய ஸ்பிரிட் மற்றும் ஒப்பர்சூனிட்டி (spirit and opportunity) விண்ணூர்திகளைப் போன்றே இந்த சுரொங் விண்ணூர்தியும் அமைந்துள்ளது.
இதன் எடை 240 கிலோ கிராம். புடைப்படங்கள் எடுப்பதற்கும், வழிக்காட்டுவதற்கும் ஒரு உயரமான கோபுரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள ஐந்து கருவிகள் அங்குள்ள பாறைகள், தாதுக்கள், வானிலை உட்பட பொதுவான சூழல் ஆகியவற்றை ஆராய பயன்படும்.
மேலும், அமெரிக்கா தரையிறக்கியுள்ள க்யூரியாசிட்டி மற்றும் பெர்செவரன்ஸ் (curiosity and perseverance) விண்ணூர்திகளைப் போல பாறைகளின் இரசாயன தன்மை குறித்து ஆராய லேசர் கருவி ஒன்றும் சுரொங்கில் பொருத்தப்பட்டுள்ளது. நீர் மற்றும் பனியின் உள் அமைப்புகள் குறித்து ஆராய்வதற்கான அமைப்பும் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் பெர்செவரன்ஸ் விண்ணூா்தியிலும் உள்ளது.
நாசா கடந்த பெப்ரவரி மாதம் 19-ஆம் திகதி செவ்வாய் கோளின் மேற்பரப்பில் பெர்செவரன்ஸ் விண்ணூர்தியை களமிறக்கியது. செவ்வாயின் பரப்பில் இப்படி ஓர் விண்ணூர்தியை நாசா களமிறக்கியது அது இரண்டாவது முறை. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை பெர்செவரன்ஸ் விண்ணூர்தி ஆராயும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செவ்வாயில் ஒரு விண்ணூா்தியை தரையிறக்கும் பணியில் இருமுறை தோல்வி அடைந்துள்ள ஐரோப்பா அடுத்த ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து `ரோசலிண்ட் பிராங்க்லின் (rosalind franklin) என்ற ரோவரை விண்ணூர்தியை களமிறக்க திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.