பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொடரை கைவிட்டு இலங்கை அணி நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அணி வீரர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அக்குழாமில் இணைந்துள்ள பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாசுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதியான மூவருக்கும் இன்றைய தினம் இரண்டாவது தடவையாக பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இரண்டாவது பரிசோதனையிலும் அவர்களுக்கு தொடர்ந்தும் தொற்று உறுதியானால் இலங்கை அணியை நாட்டுக்கு மீள அழைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இன்று மதியம் 12:30 மணிக்கு (IST) போட்டி தொடங்கும் என போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் திட்டமிட்டவாறு போட்டி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி இன்றும், இரண்டாவது போட்டி 25-ஆம் திகதியும் மூன்றாவது போட்டி 28-ஆம் திகதியும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை