இலங்கை கிரிக்கெட் குழாமில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை - பங்களாதேஷ் ஒருநாள் தொடர் திட்டமிட்டவாறு சற்று நேரத்தில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் அணி வீரர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கும், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாசுக்கும் கோரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனால், ஏற்கனவே திட்டமிட்டவாறு இன்று நண்பகல் 12.30 மணியளவில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பிக்க இருந்த நிலையில் தொடர் நடைபெறுமா என்பது சந்தேகமாகியிருந்தது.
இந்நிலையில் தொற்று உறுதியான மூவருக்கும் இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்போது ஷிரான் பெர்னாண்டோவுக்கு தொற்று மீண்டும் உறுதியாகியுள்ளதுடன், ஏனைய இருவருக்கும் தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் திட்டமிட்டவாறு நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 12:30 மணிக்கு (IST) ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை