முதலாவது ஒருநாள் போட்டியில் சுற்றுலா இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 258 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது பங்களாதேஷ் அணி.
சுற்றுலா இலங்கை அணியுடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஆரம்பமாகியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் தமிம் இக்பால் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளது.அணித் தலைவர் தமிம் இக்பாலும், லின்டன் தாசும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
ஆட்டத்தின் 2வது ஓவரின் 3வது பந்தில் ஓட்டமெதனையும் பெறாது லின்டன் தாசை வெளியேற்றியிருந்தார் சமீர.
அடுத்துவந்த சகிப் அல் ஹசனும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கை 43 ஆக உயர்ந்த போது 15 ஓட்டங்களைப் பெற்று குணதிலகவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
விக்கெட் காப்பாளர் முஜிபுகுர் ரஹீமுடன் சேர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தமிம் இக்பால் அணியின் ஓட்ட எண்ணிக்கை 99 ஆக உயர்ந்த நிலையில் 52 ஓட்டங்களைப் பெற்று டீ சில்வா பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தமிம் இக்பாலை ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றிய டீ சில்வா அடுத்த பந்திலேயே மிதுனை ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றியிருந்தார்.
99 ஓட்டங்களைப் பெற்ற போது 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் அடுத்து களமிறங்கிய மஹமுதுல்லாவுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியிருந்தார் ரஹீம்.
சிறப்பாக விளையாடி 87 பந்துகளை எதிர்கொண்டு நான்கு 4 ஓட்டங்களையும், ஒரு 6 ஓட்டத்தையும் விளாசி 84 ஓட்டங்களைப் பெற்று சன்டகன் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார் ரஹீம்.
5வது விக்கெட் இணைப்பாட்டமாக ரஹீம்-மஹ்மதுல்லா இணை 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
மஹமதுல்லாவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச்சதத்தினை கடந்து 54 ஓட்டங்களை பெற்று டீ சில்வா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் தனஞ்செய டீ சில்வா 3 விக்கெட்டுக்களையும், சமீர, குணதிலக மற்றும் சன்டகன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
258 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடத் தொடங்கியுள்ளது.
இலங்கை அணி சார்பில் குணதில மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமறிங்கி விளையாடி விருகின்றனர்.
சற்று முன்னர் வரை 2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை