Friday 19th of April 2024 07:40:00 AM GMT

LANGUAGE - TAMIL
.
தொடரும் மோசமான துடுப்பாட்டம்: 2வது போட்டியிலும் படுதோல்வியடைந்து தொடரையும் இழந்தது இலங்கை அணி!

தொடரும் மோசமான துடுப்பாட்டம்: 2வது போட்டியிலும் படுதோல்வியடைந்து தொடரையும் இழந்தது இலங்கை அணி!


பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் படு மோசமான துடுப்பாட்டத்தினால் படுதோல்வியடைந்த இலங்கை அணி தொடரையும் இழந்துள்ளது.

பங்களாதேஷ் அணியுடனான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி மிக மோசமான துடுப்பாட்டத்தின் மூலம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

முதலாவது போட்டியில் 258 என்ற வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 33 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது இலங்கை அணி.

இறுதியில் வனின்டு ஹசரங்க ஆபத்பாந்தவராக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 74 ஓட்டங்களை குவித்தமையால் இலங்கை அணி கௌரவமாக 200 ஓட்டங்களை கடந்து 33 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி இன்று (25) பகல் இரவு போட்டியாக நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியை, முதல் போட்டியைப் போன்றே ஓட்டங்களை குவிக்க விடாது சிறப்பான முறையில் கட்டுக்கோப்பாக பந்து வீசியிருந்தனர் இலங்கை பந்து வீச்சாளர்கள்.

இதன் மூலம் பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்களில் 246 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து மிக எளிதாக இலக்கான 247 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வழக்கம் போல் படு மோசமான முறையில் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அணித்தலைவர் குசல் பெரேரா காட்டிய வழியே அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வரிசையாக வெளியேறினர்.

38 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் தாமதமான ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது 40 ஓவர்களில் 245 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்று இலக்கு திருத்தியமைக்கப்பட்டது.

எஞ்சிய 2 ஓவர்களில் 119 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதியில் 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது இலங்கை அணி.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குணதிலக 24 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிடி ஹாசன் 10 ஓவர்கள் பந்து வீசி 28 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், முஷ்டாபிசூர் ரஹீம் 6 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், சஹிப் அல் ஹசன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளையும் வென்றுள்ளதன் மூலம் பங்களாதேஷ் அணி 2:0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் இடையிலான இறுதிப் போட்டி எதிர் வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE