ஜோ்மனியில் 12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் ஜூன் 7 முதல் ஆரம்பிக்கப்படும் என ஜேர்மன் சாஞ்சலர் அங்கேலா மேர்க்கெல் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
எனினும் சிறுவர்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது. அத்துடன், சிறுவா்கள் பாடசாலைக்குச் செல்வதில் தடுப்பூசி விவகாரம் தாக்கத்தைச் செலுத்தாது எனவும் அவா் கூறினார்.
ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை 12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் / பயோஎன்டெக் கோவிட் 19 தடுப்பூசி வழங்குவதை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்கனவே அங்கீகரிக்காரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூன் 7 முதல் 12 முதல் 15 வயது வரையான சிறுவர்கள் தடுப்பூசி முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ஜேர்மனியின் பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மேர்க்கெல் கூறினார்.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 12 முதல் 15 வயதான தடுப்பூசி பெற விரும்பும் அனைத்துச் சிறுவர்களுக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியையேனும் வழங்க ஜோ்மனி இலக்கு நிர்ணயித்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான முக்கிய படியாக சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது கருதப்படுகிறது.
கனடாவும் அமெரிக்காவும் ஏற்கனவே 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஜெர்மனி