இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசை அமைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளன. இதன்மூலம் 12 வருடங்கள் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
எட்டு எதிர்க்கட்சிகள் கூட்டணியாக இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக மையவாதி யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட் அறிவித்தார்.
நேற்று நள்ளிரவு வரை எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி நடத்திய தீவிர பேச்சுவார்த்தையின்போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த உடன்பாட்டின் பிரகாரம் சுழற்சி முறையின் கீழ் முதலில் வலதுசாரி யமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் பிரதமராகப் பெறுப்பேற்கவுள்ளார். தொடர்ந்து 2023 இல் யெய்ர் லாப்பிட் பிரதமராக பதவியேற்பார்.
புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் பாராளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்கட்சிகள் இணைந்து புதிய அரசை அமைப்பதற்கான உடன்பாட்டுக்கு வந்துள்ளமை குறித்து யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட் ஜனாதிபதி ருவன் ரிவ்லினுக்கு அறிவித்துள்ளார்.
வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து இஸ்ரேலிய குடிமக்களுக்கும் புதிய அரசாங்கம் சேவையாற்றும் என நான் உறுதியளிக்கிறேன் என யெய்ர் லாப்பிட் கூறினார்.
இதேவேளை, பல தசாப்தங்கள் பின்னர் ஒரு அரபு-இஸ்ரேலிய கட்சி அரசாங்கத்தில் இணைந்துள்ளது.
இந்த முடிவு கடினமானது. அத்துடன், பல சர்ச்சைகள் இருந்தன. ஆனால் ஒப்பந்தங்களை எட்டுவது முக்கியம். அரபு சமுதாயத்தின் நலனுக்காக இந்த ஒப்பந்தத்தில் பல விடயங்கள் உள்ளன என அரபு-இஸ்ரேலிய கட்சி தலைவரான அப்பாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
பென்னட்டுடன் இணைந்து லாப்பிட் அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார். தொடர்ந்து 2023 ஆகஸ்ட் 27 அன்று லாப்பிட் பிரதமராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் பெரும்பான்மையினரின் ஆதரவை எதிர்க்கட்சிக் கூட்டணி பெறத் தவறினால் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக நாடு தேர்தலுக்குச் செல்ல வேண்டிய ஆபத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.