கொரோனா வைரஸ் தொற்று நோயைச் சரியாகக் கையாண்டு கட்டுப்படுத்த பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அரசாங்கம் தவறிவிட்டதாகக் கண்டனம் தெரிவித்து பிரேசில் முழுவதும் மக்கள் தொடர்ந்து ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்த மக்கள் போராட்டம் தொடர்ந்தும் நாடு முழுவதும் இடம்பெற்று வருகிறது.
பிரேசிலில் மீண்டும் தினசரி கொரோனா மரணங்கள் 2,500 வரை அதிகரித்ததை அடுத்தே புதன்கிழமை முதல் மக்கள் மீண்டும் இலட்சக்கணக்கில் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
கொரோனா தொற்று நோயால் அமெரிக்காவை அடுத்து மிக மோசமான பாதிப்பை பிரேசில் எதிர்கொண்டுள்ளது. 21 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் இதுவரை கொரோனா பாதிப்பால் 4 இலட்சத்து 68 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளில் பரவி வந்த சமயத்தில், பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனாரோ, ஊரடங்கை கடுமையாக்காமல், முக கவசம் அணியத் தேவையில்லை எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அவர் மெத்தனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பிரேசில் நாடாளுமன்ற விசாரணைக் குழுவினர் நடத்திய விசாரணையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரேசில் அரசு தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. இதனால் போல்சனாரோவிற்கு எதிராக கடந்த மாத இறுதி முதல் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமையன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி போல்சனாரோ உரையாற்றிய போது, அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரியோடி ஜெனிரோ மக்கள் பாத்திரங்களை தட்டி ஓசையெழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், அவா் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.