உலகளாவிய கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் விமான பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கைக்கு ஜி-7 நாடுகளின் கலந்துரையாடலில் இந்தியா எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடுகளுக்கிடையிலான பயணத் தடைககள் காரணமாக மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் முடங்கிப் போயுள்ள நிலையேற்பட்டுள்ளது.
தனிநபர்களது உளவியல் சார்ந்த பாதிப்புகளையும், நாடுகளின் சுற்றுலா துறை மூலமான வருவாய் இழப்பினையும் இந்த முடக்க நிலை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் மேற்குறித்த நிலையில் இருந்து விடுபடுவதற்கு பல்வேறு நாடுகள் பலவிதமான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
அந்தவகையில் சீனா டிஜிட்டல் வடிவ தடுப்பூசி பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஜப்பானும் இத்தகைய பாஸ்போர்ட்டுகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த தருணத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றைக்கொண்ட ஜி-7 அமைப்பின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா சார்பில் மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொண்டு பேசினார்.
இதன்போது கருத்துரைக்கும் போதே தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்திற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவல் தருணத்தில், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் வளரும் நாடுகளில் இன்னும் மக்கள் தொகையில் குறைவான சதவீதத்தினருக்குத்தான் தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி பாஸ்போர்ட்டு வழங்குவது என்பது மிகவும் பாரபட்சமான ஒன்றாகும்.
கொரோனா தொற்றை வீழ்த்துவதற்கு தற்போதைய சூழலில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவற்றின் சமமான விநியோகத்தை உறுதி செய்வது கட்டாயமான ஒன்று.
இந்தியா அனைத்து தடுப்பூசிகளையும் 60 சதவீத அளவுக்கு உற்பத்தி செய்கிறது. மிகுந்த நிபுணத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் உலகிற்கு விநியோகம் செய்ய பொருத்தமானது.
ஒருவரையும் பின்னால் விட்டு விடாமல், நிலையான வளர்ச்சி இலக்கு மந்திரத்தை வழங்குவதற்கு நாம் செயல்பட வேண்டும். ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி முன்னோக்கி நடை போட வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தில் சீர்திருத்தங்களுக்கும், எதிர்காலத்தில் சிறந்த தயார் நிலையை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்துக்கும் இந்தியா ஆதரவு அளிக்கிறது.
தற்போதைய மற்றும் எதிர்கால பன்முக சுகாதார அச்சுறுத்தல்களை சமாளிக்க ஏற்ற விதத்தில் ஒரு சுகாதார நுண்ணறிவு ஆராய்ச்சி மையத்தை ஜி-7 அமைப்பு தொடங்குவதற்கும் இந்தியா தனது ஆதரவை வழங்கும் என, இந்தியா சார்பில் கலந்து கொண்டிருந்த இந்திய மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் காணொலிக்காட்சி வழியாக கூறியிருந்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, சீனா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, அமெரிக்கா