இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று திருகோணமலை, நிலாவெளி, இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதில் பயணித்த இரு விமானிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் விமானப்படைப் பேச்சாளர் க்ரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
விமானிகளுக்கான அடிப்படைப் பயிற்சிக்காக இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று காலை 10.22 மணிக்கு சீனக்குடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம் 10.48 மணியளவில் தரையிறக்கப்பட்டது எனவும், அவர்களின் திறமையால் ஒரு பேரழிவு தவிர்க்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண அறிவுறுத்தியுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை