இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இடையே வருடாந்த ஒப்பந்தம் தொடர்பில் இழுபறி நிலவி வந்த நிலையில் இங்கிலாந்து செல்வதற்கு வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சென்று ஜூன்-ஜூலை மாதங்களில் அந்த நாட்டு கிரிக்கெட் அணியுட தலா மூன்று ரீ-20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இலங்கை அணி செல்லவுள்ள நிலையில் வருடாந்த ஒப்பந்த விவகாரம் பெரும் இழுபறிநிலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்பதற்கும், அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் இலங்கை கிரிக்கெட் அணிவீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வருடாந்த போட்டி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் தீர்வுகாணப்படாத நிலையில் இங்கிலாந்து தொடரின் பின்னர் அது குறித்த தீர்மானம் எடுக்கப்பதாக மேற்படி பேச்சுவார்த்தையின்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து செல்லும் இலங்கை அணி முதலில் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
அதன் பின்னர் ஜூன்-23, 24, 26 ஆகிய திகதிகளில் ரீ-20 போட்டிகளிலும், ஜூன்-29, ஜூலை-01 மற்றும் 04 ஆகிய திகதிகளில் ஒருநாள் பொட்டியிலும் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை