பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் சாத் டோலா என்ற மிகப்பெரிய சேரிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் குறைந்தது 100 குடிசைகள் எரிந்து நாசமாயின. அத்துடன், 500 வரையான குடிசைகள் பகுதியளவில் எரிந்தன.
நேற்று திங்கட்கிழமை இந்தத் தீவிபத்து இடம்பெற்றது. 18 தீயணைப்புப் பிரிவுகள் பல மணிநேரம் கடுமையாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக பங்களாதேஷ் தீயணைப்பு சேவை தலைமையக கடமை அதிகாரி லிமா கானோம் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
டாக்காவின் மொஹகாலி பகுதியில் உள்ள சாத் டோலா சேரி ஏழைகள் அதிகளவில் வசிக்கும் மிக அடர்த்தியான குடியிருப்பு வளாகமாகும். இங்கு சுமார் 2.000 குடிசைகள் உள்ளன.
இங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என தீயணைப்பு சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு துணை பணிப்பாளர் டெபாஷிஷ் பர்தன் கூறினார்.