இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் போட்ட சர்வதேச நாடுகளின் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற பயணிகளுக்கு தற்போதைய 14 நாள் தனிமைப்படுத்தும் காலத்தை தளர்த்த கனடா திட்டமிட்டுள்ளது எனவும் ப்ளூம்பெர்க் சா்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கூட கனடாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பிரிசோதனை நடத்தப்படும். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவா்கள் குறுகிய கால தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் கனேடிய அரசின் உத்தியோகபூா்வ அறிவித்தல் அடுத்த சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்கா – கனடா எல்லைக் கட்டுப்பாட்டை ஜூன் -22 முதல் தளர்த்துவது குறித்து கனடா ஆராய்ந்து வருகிறது. அமெரிக்கா – கனடா எல்லைக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கான சாதகமான சமிக்ஞைகளை ட்ரூடோ அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
நாட்டின் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் தொடர்ந்தால் அனேகமாக ஜூன் -22 அமெரிக்கா – கனடா எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.