ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள ஃபோர்ஷெய்ம் தடுப்பு மையத்தின் நுழைவாயிலை ((Pforzheim Detention Centre in southwestern Germany) முற்றுகையிட்டு அகதிகள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் புலம்பெயர் ஜேர்மனிய தமிழர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஃபோர்ஷெய்ம் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை நாடு கடத்தும் நோக்கில் அவா்களை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ஜேர்மனிய அதிகாரிகள் தயாராகி வருவதாக தகவல் வெளியானதை அடுத்தே ஃபோர்ஷெய்ம் தடுப்பு மையத்தின் வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
70 மணித்தியாலங்களுக்கு மேலாக அகதிகளை நாடு கடத்துவதை எதிர்த்து போராட்டம் தொடரும் நிலையில் இன்று தடுப்பு மையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையேல் அவா்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாக போராட்ட களத்தில் தற்போது உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் போராட்டம் இடம்பெறும் இடத்தில் உள்ள தங்களுக்கு உடனடி உதவி தேவை எனவும் அவா்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
3 மாதங்களுக்கு முன்னரும் ஜேர்மனியில் இருந்து ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில் இரண்டாவது தடவையாகவும் அகதிகளை நாடு கடத்த ஜேர்மனி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.