"போலித் தகவல்களைப் பரப்புவோரைக் கைதுசெய்கின்றோம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது." என ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றஞ்சாட்டினார்.
சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க விசேட சி.ஐ.டி. குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மனுஷ நாணயக்கார எம்.பி. மேலும் கூறுகையில் "போலித் தகவல்களைப் பரப்புவோரைக் கைது செய்ய நடவடிக்கை என்ற போர்வையில் சமூக ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எவராவது போலித் தகவல் பரப்பினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்கின்றோம்.
ஆனால், சமூக ஊடகங்களை மிரட்டி, நாட்டின் உண்மையான நிலவரம் தொடர்பான தகவல்கள் மக்களுக்குச் சென்றடைவதைத் தடுப்பதற்காக ஒடுக்குமுறையை அரசு கையாண்டு கைது படலத்தையும் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன?" – என்று கேள்வி எழுப்பினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை