திருகோணமலை, மட்டக்களப்பு உட்பட 7 மாவட்டங்களில் 26 கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று முதல் விலப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய திருகோணமலை, நுவரெலியா, மட்டக்களப்பு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி மற்றும் முனைச்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சென்கும்ஸ் தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாட்டு நடைமுறைகளும் இப்பகுதிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை