கொழும்பு துறைமுகத்தில் எரிந்து மூழ்கிய எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறி கரையோரம் எங்கும் பரந்துள்ள கழிவுகளை அகற்ற தன்னார்வலர்களின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது.
இதுவரை சேகரிக்கப்பட்ட கழிவுகள் கொள்கலன்களில் சேமிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய கழிவுகளால் சமுத்திர சுற்றாடல், கரையோரப்பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் கரையோரப் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்புக்களுக்கு இழப்பீடு கோரப்படும் என கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதார இராஜாங்க அமைச்சர் டாக்டர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்து கரையொதுங்கிய பெரும்பாலான கழிவுகள் அகற்றப்பட்டுவிட்டன. எனினும் இன்னமும் கழிவுகள் காணப்படுகின்றன எனவும் அவா் கூறினார்.
மணலை தவிர்த்து குப்பைகளை சேகரிக்கக்கூடிய புதிய தொழிநுட்ப முறையை தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. பல இடங்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் சில பகுதிகளில் உள்ள கழிவுகளை பாதுகாப்பான வகையில் அகற்ற தன்னார்வலர்களிடமிருந்து உதவி கோரப்படும் என்றும் டாக்டர் நாலக கொடஹேவா குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கப்பல் தீப்பற்றி எரிந்ததால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு கப்பல் உரிமையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் இழப்பீடு குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை.
இந்த இழப்பீடு பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பிறருக்கான கொடுப்பனவுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதால் இழப்பீட்டு கோரிக்கை குறித்து தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக டாக்டர் நாலக கொடஹேவா கூறினார்.
கடலோரப் பகுதிகளில் மிக விரைவில் இயல்புநிலையை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.