பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கன்னத்தில் அறைந்த இளைஞனுக்கு 14 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாதகால சிறைத் தண்டனை விதித்து வலென்சியா நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் பிரகாரம் நான்கு மாதங்கள் அவர் முழுமையாகச் சிறையில் அடைக்கப்படுவார். ஏஞ்சிய 14 மாதங்கள் கட்டாய உளவியல் சிகிச்சை மற்றும் கண்காணிப்புகளுடன் பராமரிக்கப்படுவார். ஆனால் அபராதத் தொகை எதுவும் விதிக்கப்படவில்லை.
அத்துடன் இரண்டு ஆண்டுகள் கட்டாய வேலை மற்றும் தொழில் பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். அவர் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு அவரது சிவில் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.
பிரான்ஸ் தொற்கு டிரோம் பகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்து மக்களைச் சந்தித்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கூட்டத்தில் இருந்த தாமியன் தாரெல் என்ற 28 வயது இளைஞன் திடீரெனக் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே அவருக்கு 14 மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 18 மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மக்ரோனின் தெற்கு பிராந்திய வருகைக்கு பல நாட்களுக்கு முன்பிருந்தே அவர் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின்போது கூறியுள்ளார். முட்டை அல்லது வேறு பொருட்களை வீசித் தாக்குவது குறித்தே நான் யோசித்தேன். கன்னத்தில் அறைவது குறித்து முன்கூட்டியே திட்டமிடவில்லை எனவும் அவா் தெரிவித்தார்.