"நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. நாட்டினதும் மக்களினதும் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே நாடாளுமன்றத்துக்குச் செல்லத் தீர்மானித்திருக்கின்றேன். யார் எதைக் கூறினாலும் மக்களே இறுதியில் அனைத்தையும் தீர்மானிக்கின்றனர்."
-இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தனிநபர் பொருளாதாரத்தை வலுப்படுத்தாது தேசிய பொருளாதாரம் வலுவாகாது. எனவே, தீர்க்கப்படா பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும். கொரோனா நெருக்கடி, பொருளாதாரப் பாதிப்பு, இயற்றை அழிவு மற்றும் கப்பல் விபத்து என இலங்கையைச் சூழ பிரச்சினைகளே உள்ளன.
எனது நாடாளுமன்ற வருகை தலைப்புச் செய்திகளாக இருந்தாலும் நாட்டையும் மக்களையுமே நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அரசால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உறுதியாகவே நாம் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சிக் எதை கூறினாலும் இறுதியில் மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகள் குறித்து பேசுவற்கே நான் நாடாளுமன்றம் செல்கின்றேன்.
'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பல் அழிவு குறித்து அரசு இன்னும் பொறுப்பற்ற வகையிலேயே செயற்படுகின்றது. கப்பலில் நைட்ரிஜன் கசிவு ஏற்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டால் துறைசார்ந்தவர்களும், சுங்கப் பிரிவினரும் மற்றும் வைத்தியர்களே முதலில் கப்பலுக்குச் சென்றிருக்க வேண்டும். கடும் கடல் காற்றால் கப்பலில் தீ பரவியது என நிறுவனம் கூறுகின்றது. ஆனால், கடும் காற்றுடன் கூடிய காலநிலை ஏற்படும் என 24 மணித்தியாலயத்துக்கு முன்னதாகவே வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது. மறுபுறம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை இலங்கை அரசு பெற்றுக்கொள்ளவும் இல்லை. நாடாளுமன்றத்தை உடன் கூட்டி இது குறித்து கலந்துரையாடவும் இல்லை.
எனவே, கொரோனா வைரஸ் தொற்று எந்தளவு நீண்ட காலத்துக்கு இலங்கையைப் பாதிக்குமோ அதேயளவான காலம் வரை 'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பல் ஏற்படுத்திய அழிவுகளும் நாட்டில் இருக்கும்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை