கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக போராட்டத்துக்கு உதவும் வகையில் சர்வதேச அளவில் ஏழை நாடுகளுக்கு 100 கோடி கோவிட் 19 தடுப்பூசிகளை வழங்கும் அறிவிப்பு ஜி-07 தலைவர்களின் உச்சி மாநாட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி-07 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகும் நிலையில் இந்த மாநாட்டில் ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்கும் முடிவுக்கு ஜி-07 தலைவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மட்டும் சுமார் 10 கோடி கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.
இதில் முதல் 50 இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும் மேலும் 2.5 கோடி தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏழை நாடுகளுக்கு 50 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த சில மணி நேரங்களின் பின்னர் ஜோன்சன் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டார்.
2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகம் முழுவதிலும் அனைவருக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களுக்கு உறுதியளிக்குமாறு ஜோன்சன் ஏற்கனவே ஜி-07 தலைவர்களிடம் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்