இலங்கை கடற்பரப்புக்குள் 'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பல் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
"நீதி அமைச்சர், துறைசார் நிபுணர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புகள், ஆலோசனைகள் பெறப்பட்டே நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதன்போது நாட்டிலுள்ள மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கருவாடு உற்பத்தி செய்பவர்கள், மீன்களைக் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்பவர்கள், மீன் கடைக்காரர்கள், மீன் ஏற்றிச் செல்லும் லொறியின் சாரதி உள்ளிட்டோரும் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நட்டஈடு வழங்கும் வகையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
கப்பலில் இருந்த தரவுகள், தகவல்கள் இருக்கின்றனவா என்பது தெரியாது. அது தொடர்பில் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
கப்பலொன்று வரும்போது எமக்கு வழங்கப்படும் மின் அஞ்சல் உள்ளிட்ட தகவல்கள் எம்மிடம் உள்ளன. அவற்றை மாற்ற முடியாது. அவற்றை அடிப்படையாக வைத்தே நட்டஈடு கோரப்படும்" - என்றார்.