கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் கைது. க்யூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.
இலங்கையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்பதற்கும், தங்களது உறவினர்கள் லண்டன்,கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தங்கி இருப்பதால் அவர்களுடன் சேர்ந்து வாழ வெளி நாடுகளுக்கு தப்பிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இலங்கை அரசு விமான போக்குவரத்தை ரத்து செய்ததுடன் விமான நிலையங்கள் மூடியது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு அருகே தமிழநாடு உள்ளதால் கடல் வழியாக தமிழகம் வந்து தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27ஆம் தேதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபதுறையிலிருந்து 24 ஆண்கள்இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் கள்த்தோணியில் கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.
தூத்துக்குடி வந்த 27 பேரும் மதுரையில் தங்கி அங்கிருந்து கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இது குறித்து க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு போலீசார் இன்று 27 பேரையும் மதுரையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 27 பேருக்கு கடவுச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் 27 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே இலங்கையில் இருந்து கனடா செல்ல கள்ளத்தோணியில் மங்களூர் சென்ற 34 இலங்கையர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.