இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக, இலங்கைக்குள் பிரவேசித்து தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளைப் பகுதியில் வைத்து 36 வயதுடைய சுப்பிரமணியம் பிங்கல என்ற சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த நபர் சுமார் இரண்டரை மாதங்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் ஊடாக, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2009ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சந்தேகநபர் சென்னை நோக்கிப் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்பின்னர், இந்தியாவின் நாகபட்டினம் பகுதியில் சுமார் 10 வருடங்கள் வாழ்ந்து வந்த குறித்த நபர், இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கடல் மார்க்கமாக இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறல், குடிவரவு – குடிப்பெயர்வு சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, முல்லைத்தீவு