கொரோனா நோயாளிகளுக்காக 16 மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவவுள்ளதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் கூறியுள்ளார். அவர் கொரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார்.
நாட்டின் பல பகுதிகளில் பெரிய மருத்துவமனைகளில்கூட ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. கொரோனா தொற்றுக்கு இலக்காகி வீட்டுத் தனிமையில் இருக்கும் மக்களில் சிலருக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
இந்தச் சிக்கலை இல்லாதொழிக்க பதினாறு மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவவுள்ளதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவத்துள்ளார்.
எல்லா மாநிலங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ முயற்சி செய்தேன். 150-200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும். தற்போது ஆந்திராவின் இரு பகுதிகளில் நிறுவப்படுகிறது.
இந்த மாத இறுதியிலிருந்து இப்பணிகள் முழுவீச்சில் நடைபெறும். 16 மாநிலங்களில் செப்டம்பரில் இப்பணிகள் நிறைவுபெறும்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இனி ஏற்படாது. சிலநேரங்களில் நீண்ட தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலைமை நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. சிலசமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதன்மூலம் அப்படியொரு நிலைமை இனி ஏற்படாது என நம்புகிறேன்.
கொரோனா பாதிப்பு முடிவடைந்தாலும் கிராமங்களிலும் பக்கத்து மாவட்டங்களிலும் எப்போதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது என்று குறிப்பிட்டார்.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா