தாய்வான் வான் வழி பாதுகாப்பு எல்லைக்குள் 28 போர் விமானங்களை அனுப்பி மீண்டும் ஒருமுறை தாய்வானை சீண்டும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது.
சீனாவின் 28 போர் விமானங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தங்கள் எல்லைக்குள் நுழைந்து வெளியேறியதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுமுதல் தாய்வான் வான்பரப்புக்குள் அடிக்கடி தங்களது போர் விமானங்களை அனுப்பி அந்நாட்டை சீனா சீண்டி வருகிறது. எனினும் நேற்று முன்னர் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான விமானங்களை முதல்முறையாக சீனா அனுப்பியுள்ளது.
இதனையடுத்து சீன விமானங்களை எதிா்கொள்ளும் வகையில் தனது வான்வழி ரோந்துப் படையை தயாா் நிலையில் வைத்துள்ளதாகவும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில் தாய்வான் நீரிணை பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீா்வுகாண வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் தாய்வானை நோக்கி போா் விமானங்களை சீனா அனுப்பியுள்ளது.
1949-இல் உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தாய்வானும் பிரிந்தன. ஆனால் தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. 2016-இல் தாய்வான் ஜனாதிபதியாக சாய் இங்-வென் தோ்வு செய்யப்பட்டதிலிருந்து, அந்நாடு மீது தூதரக, இராணுவரீதியாக சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக கடந்த ஆண்டு முதல் தனது இறையாண்மையைப் பாதுகாப்பதாகக் கூறிஅடிக்கடி தாய்வானை நோக்கி போா் விமானங்களை சீனா அனுப்பி வருகிறது.
கடந்த மாா்ச்சில் அதிகபட்சமாக 25 போா் விமானங்களை தாய்வான் எல்லைக்குள் சீனா அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.