இந்தியாவில் பெரும் அவலத்தை ஏற்படுத்தி வரும் 'டெல்டா' வகை திரிபு பெற்ற வைரஸ் இலங்கையில் மேலும் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 'டெல்டா' திரிபு வைஸ் தொற்றுடன் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் இருந்து ஐவர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதிக ஆபத்துமிக்கதான இந்தியாவின் 'டெல்டா' வைரஸ் திரிபு இலங்கையில் மேலும் பரவாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற கொவிட் பரவல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இந்த புதிய திரிபு பரவலால் ஏற்படும் பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.அதற்கமைய, குறித்த திரிபு அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தை தனிமைப்படுத்தி அப்பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து பீ.சி.ஆர் மாதிரிகளை பெற்று பரி்சோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறே, தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய நபர்களை கண்டறிந்து பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும், அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இந்த டெல்டா திரிபு பரவியுள்ளதா எனக் கண்டறிய விசேட விசாரணைகளை முன்னெடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு தேவையான வளங்களை உடன் வழங்க அவசியமான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நேற்றைய கலந்துரையாடலிலன் போது சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸின் 'டெல்டா' திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொடர்பாளர்களை அடையாளம் காண்பதற்கு, தேசிய புலனாய்வுப் பிரிவும், தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவும் இணைந்து செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை, கொழும்பு